Tuesday, August 28, 2007

யுத்த நிறுத்தத்திற்கு முன் யாழ்பாணமும் ராணுவமும்...

(நான் அடுத்ததாக சாவகச்சேரியில் கண்ட மற்றும் எற்பட்ட அனுபவங்களை எழுதுவதாக இருந்தேன். ஆனால் நண்பர் செ.குணரத்தினம் யாழ் மக்கள் யுத்தநிறுத்தம் வரை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஒரளவு நிம்மதியாக இருந்ததாக சொன்னார். இதுதான் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நான் பார்த்த யாழ்பாணம்.)

யாழ் பாதை திறந்த இரண்டொரு மாதத்தில் அனேக மக்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். பாடசாலை தொடங்க ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வருடம் மிகவும் முக்கியமான வருடம், ஏன் என்றால் இலங்கையில் 5ஆம் வகுப்பில் ஸ்காலர்ஷப் ரெஸ்ற் நடப்பது வழக்கம். ஆனால் இடம்பெயர்வால் 95ஆம் ஆண்டு நடக்கவேண்டிய பரீட்சை நடக்கவில்லை அதனால் 96ஆம் ஆண்டு இரண்டு பரீட்சைகளையும் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த ஸ்காலர்ஷப் பரீட்சை வந்து எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த கண்டத்தை கடந்தால் அடுத்து 10ஆம் வகுப்பில் வரும் ஓ.ல் பரீட்சைதான். கிட்டத்தட்ட ஆறு மாதம் படிப்பில்லாமல் இருந்த நாங்கள் இரண்டு மாதத்தில் பரீட்சைக்கு தயாரகவேண்டும். அந்த நேரத்தில் அடிக்கடி சுற்றிவளைப்பு நடக்கும். அப்படி நடந்தால் அந்த நாள் முழுக்க வீணாகிவிடும்.

சுற்றி வளைப்பு நேரத்தில் கொஞ்சம் வயது வந்தவர்கள் வீட்டுக்குவெளியே வரமாட்டார்கள். வயது குறைந்த எங்களை பிடித்தால் ஐடியை பார்த்துவிட்டு திருப்பி அனுப்புவான் அதனால் பெற்றோர்கள் எங்களை கொஞ்சம் பயமில்லாமல் அனுப்புவார்கள். இதுவும் ஆண்பிள்ளைகளை மட்டுந்தான். சுற்றி வளைப்பு நேரத்தில் 5 வயது பெண்பிள்ளையை கூட வீட்டு வாசல் படியை தாண்ட விடமாட்டார்கள். சுற்றி வளைப்பின்போது வயது கூடியவர்களை கூட்டிக்கொண்டுபோய் தலையாட்டிக்கு காட்டிவிட்டு அனுப்பிவிடுவார்கள் ஆனால் சில நேரத்தில் சும்மா சிலபேரை நிற்பாட்டிவைத்து அடித்துவிட்டு அனுப்புவான். அடிவாங்கிய ஓருவருக்கும் இயக்கத்துடன் தொடர்பு இருந்திருக்காது. காலப்போக்கில் இதுவெல்லாம் அன்றாடப் பழக்கமாகிவுட்டது.

இதே காலப்பகுதியில் யாழ் நகரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. யாழ் நகரத்துக்குள் வரும் எவரும் செக் பொயின்ற் தாண்டித்தான் போகவேண்டும். எனக்கு பழக்கமானது தட்டாதெரு செக் பொயின்ற் (யாழ் நகரம் செல்லும்போது) மற்றும் கலப்பிட்டி செக் பொயின்ற் (வீடு வரும்போது). இது இரண்டு செக் பொயின்ற்களும் ஓன்வே செக் பொயின்ற்கள். இதில் நாங்கள் பட்ட கஸ்ரம் கொஞ்ச நஞ்சமில்லை. செக் பொயின்ரிலிருந்து 200 மீற்றர் தொலைவிலிருந்தே சைக்கிளிலிருந்து இறங்கி நடக்கவேண்டும், சின்னக்குழந்தையிலிருந்து நடக்கமுடியாமலிருக்கும் வயது போனவர்கள்வரை, வருத்தக்காரர்களுக்கும் இதே கதிதான். நடக்கும் சிறிய பாதையோ முள்ளுக்கம்பிகளால் கட்டப்பட்டிருக்கும். எங்களது மண்ணிலேயே எங்களை ஏதோ குற்றமிளைத்தவர்கள்போல் நடத்தினார்கள். செக் பொயின்ரில் வைத்து இரண்டு ஐ.டிகளையும் பார்த்து பாடசாலை பையை பார்த்துத்தான் அனுப்புவான். இவர்களின் நினைப்பு என்னவோ புலிகள் செக் பொயின்ற்களால்தான் யாழ் நகரத்துக்கு செல்கிறார்கள் என்பது. கிட்டத்தட்ட 11 வயதுக்குமேற்பட்ட அனைவருக்குமே 2 ஐ.டிக்கள் இருந்தன. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் வடக்கில் வசிப்பதற்கான ஐ.டிக்கள். மற்றவர்களுக்கு தேசிய வடக்கில் வசிப்பதற்கான ஐ.டிக்கள். யாரும் வெளியில் செல்லும்போது வீட்டிலுள்ளவர்கள் மறக்காமல் சொல்லுவது ' ஐ.டிக்களை மறக்கால் எடுத்துக்கொண்டுபோங்கோ'. இரண்டு வீடுதள்ளி விளையாடப்போகும்போது கூட ஐ.டிக்களை எடுத்துச் சென்றிருக்கின்றோம்.

6 மணிக்குள் ஊரே அடங்கிவிடும் 6 மணிக்குப்பின் வெளியே சென்றால் அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதமில்லை. இப்படித்தான் யுத்த நிறுத்தத்தின் முன்னர் அங்கு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. புலிகள் ஓரு போதும் புலிகள் யாழ்குடாவை விட்டுச் செல்லவில்லை. இது தெரியாமல் ஏதோ யுத்த நிறுத்தத்தின் பின்னர்தான் புலிகள் யாழ்குடாவுக்கு வாந்ததாகவும் அதனால்தான் ராணுவம் மக்களை கொல்வதாகவும் யாரும் நினைத்தால் அது உங்களின் அறியாமையைதான் காட்டுகிறது.


நன்றி
ஆறு

Labels:

2 Comments:

Blogger கானா பிரபா said...

அவலங்களைப் பதிவுகளாக்கும் உங்கள் முயற்சியைத் தொடருங்கள்

September 6, 2007 at 5:49 PM  
Blogger aaru said...

நன்றி கானா பிரபா.

September 7, 2007 at 4:56 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home